2. தேவதை
2024
"நான் செத்துடேனா?" என்று மோகன் கேட்டான்.
"இல்லையே" என்று மாயா சொன்னாள்.
"அப்புறம் எப்படி என் கண்ணுக்கு தேவதை தெரியுது?"
மாயாவுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. ஆனால், அவளைத்தவிர பிற அனைத்து மாணவர்களும் "ப்ச்" என்று சலித்துக் கொண்டனர்.
"எப்பா டேய்! மொக்க மோகா, கீழ விழுந்ததுல உனக்கு ஏதாவது தலையில கீது பட்டுருச்சா" என்றான் மோகனது நண்பன் டெஸ்லா.
ஹாக்கி அணியில் இருந்தவர்களில் ஒருவன், "மாப்ள இவன காலுல அடிச்சதுக்கு பதிலா வாய்ல போட்டிருக்கணும் டா" என்றான்.
பிற அனைத்து மாணவர்களும் மெல்ல சிரித்து விட்டு, மோகனை அவனது ஹாக்கிக் குழுவிடம் விட்டு விட்டு அவரவர் பயிற்சிக்கு திரும்பினர். ஓடிக்கொண்டிருந்த மாயாவை அவன் மெல்ல சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை மாயா திரும்பாமலே தெரிந்து கொண்டாள்.
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு மொத்தக் கல்லூரியே பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தது. அனைவரும் போட்டியில் வென்று விட வெறித் தனமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால், மோகன் மட்டும் எவ்வித அழுத்தமும் இன்றி மிக இயல்பாக அந்த மைதானத்தில் சுற்றிக் கொண்டிருந்தான்.
அவனது நோக்கம் வெற்றி அல்ல. ஏன் விளையாட்டு கூட அல்ல. அவனது நோக்கம் மாயா. அவளைப் பார்ப்பது. அவள் இருக்கும் இடத்தில் இருப்பது. அவளுடன் பேச கிடைக்கிற வாய்ப்புகளுக்காக காத்திருப்பது.
*
கல்லூரிக்கு போனால், அது பள்ளி போல இருக்காது. நாம் விரும்பிய படி வேண்டுமென்கிற போது கட் அடிக்கலாம். விழுந்து விழுந்து படிக்க வேண்டிய அவசியமில்லை. ஜாலியாக இருக்கலாம், என தமிழ் சினிமாவை நம்பி கல்லூரியில் காலடி வைத்தவனுக்கு முதல் நாள் என்ஜினீயரிங் கிராபிக்ஸ் வகுப்பில் கோடு போட 2H பென்சில் கொண்டு வரவில்லை என அவன் செவுள் மீது ஒன்று வைத்தார் விரிவுறையாளர் சேகர். அந்த அடியில் அவன் நினைத்தது போல கல்லூரி இருக்காது என அவனுக்கு புரிய வைத்தார்.
கண்ணீர் மல்க கன்னத்தில் கை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்த மோகனைப் பார்த்து யாரோ சிரிப்பது போல இருந்தது. ஆனால், அன்று அவனுக்கு மட்டுமல்ல பென்சில் கொண்டு வராததற்கு, டிராயிங் ஷீட் கசங்கிப் போனதற்கு, ட்ராஃப்டர் சரியாக பொருத்தாதற்கு என பல காரணங்களுக்காக மேலும் மூன்று மாணவர்களுக்கு செவுள் மீது விழுந்தது. விரிவுரையாளர் சேகருக்கு அன்று வீட்டில் என்ன பிரச்சினையோ தெரியாது. ஆனால், அவர் விட்ட அறையில் வெவ்வேறு பள்ளியில் படித்த அந்த மாணவர்கள் ஒரு கூட்டமாக மாறிப் போனார்கள்.
மகேந்திரன், டெஸ்லா, மோகன் என்ற அந்த மூன்று மாணவர்களும் சைக்கோ சேகரின் வகுப்புகளுக்கு மட்டும் தொடர்ச்சியாக கட் அடிக்க முடிவு செய்தனர். இன்ஜினியரிங் கிராஃபிக்ஸ் வகுப்பிற்கு மட்டும் தொடர்ச்சியாக கட் அடித்து விட்டு பிற அனைத்து வகுப்புகளுக்கும் சென்றால், அட்டெண்டன்ஸ் ஷார்ட்டெஜ் ஆகாமல் செமஸ்டர் பாஸ் ஆகி விடலாம் என டெஸ்லா கணக்கிட்டு சொன்னான்.
அதன் படி என்ஜினீயரிங் கிராபிக்ஸ் வகுப்பு நேரத்தில் கேன்டீன் சென்று முட்டை பப்ஸ் சாப்பிட்டு நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர். அப்படி சில நாட்கள் ஓடிய பிறகு.
ஒருநாள் அந்த மூன்று பேரும் கேன்டீனில் உட்கார்ந்து பப்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அங்கே அந்த சைக்கோ சேகர் வந்தார்.
"கிளாஸ் டையத்துல இங்க என்னடா பண்ணிட்டு இருக்கீங்க?"
"டீ சாப்பிட வந்தங் சார்."
"இந்தா இந்த ரெஜிஸ்டர் எடுத்துட்டு ஒழுங்கா கிளாஸ் போயி சேருங்கடா." என்று ரெஜிஸ்டரை கொடுத்து அனுப்பினார்.
இப்போது ரெஜிஸ்டரை கையில் வாங்கிக் கொண்டதால் வேறு வழியின்றி அந்த மூவரும் அந்த வகுப்பிற்கு சென்றனர். அப்போது தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.
இதனை வாசித்துக் கொண்டிருக்கிற வாசகர்களே உங்களுக்கு பட்டாம்பூச்சி விளைவு என்றால் என்னவென்று தெரியும் என நினைக்கிறேன்.
ஏதோவொரு நாட்டில் ஒரு பெரும் புயல் வீசுவதற்கும் வேறேதோ நாட்டில் இருக்கிற ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பிற்கும் தொடர்புள்ளது என்கிறது அந்தத் தேற்றம்.
அதே போல ஒரு நிகழ்வைச் சொல்கிறேன். ஒருவேளை அன்று சிவில் டிபார்ட்மெண்ட் ப்ரஃபசர் செந்தில் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால், ஒருவேளை ஒரு வில்லங்கமான பையன் யூ ட்யூப் மேனோ மீட்டரை உடைக்காமல் போயிருந்தால், ஒருவேளை சிவில் ஹெச்.ஓ.டி அவரைப் பார்த்து,
"உங்களுக்கு ஒரு வேலையும் பாத்து செய்ய தெரியாதா? கொஞ்சம் கவனமா இருந்தா என்ன?"
என்று கேட்காமல் போயிருந்தால்,
"எனக்கு என் வேலையை சரியா செய்யத் தெரியும். நான் என்னோட ஜாப்ப செஞ்சு பிரமோஷன் வாங்குறவன் உன்னை மாதிரி ப்ரின்சுப்பாலுக்கு ப்ளோ ஜாப் செஞ்சு பிரமோஷன் வாங்குனவன் இல்லை"
அப்படின்னு சொல்லாம போயிருந்தா, பசங்க முன்னாடி திட்டிட்டானே இவனை விடக் கூடாதுன்னு் சிவில் ஹெச்.ஓ.டி. கட்டம் கட்டாம போயிருந்தா, செந்தில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்கணும்னு கேட்காம போயிருந்தா,
"இந்த நாய் கிட்டையெல்லாம் நான் மன்னிப்பு கேட்கனுமா? இந்த வேலை மயிரே வேண்டாம்"
என்று சொல்லிவிட்டு ராஜினாமா செய்யாமல் போயிருந்தால், நிர்வாகத்தால் உடனடியாக சிவில் டிபார்ட்மெண்ட்க்கு இன்னொரு விரிவுரையாளரை
போட முடிந்திருந்தால், வேறு வழியில்லாமல் சிவில் மாணவர்களுக்கும் மெக்கானிக் மாணவர்களுக்கும் ஒன்றாக என்ஜினீயரிங் கிராபிக்ஸ் வகுப்பு எடுத்தாக வேண்டிய நிலை இல்லாமல் போயிருந்தால் மோகனின் வாழ்க்கை மொத்தமாக மாறிப் போயிருக்காது.
இந்தக் கதைக்கு துளி கூட சம்ப்பந்தமில்லாத சிவில் டிபார்ட்மெண்ட் செந்தில் செய்த சிறு செயல் எவ்வளவு பெரிய பெரிய விளைவுகளையெல்லாம் உண்டாக்கியது எனப் பார்க்கலாம்
ரெஜிஸ்டரை வாங்கி விட்டதால் வேறு வழியின்றி அந்த மூவரும் அன்று அந்த வகுப்பிற்கு சென்றனர். அன்று தான் மோகன் மாயாவை முதன் முதலாக பார்த்தான்.
விழித்துக் கொண்டு கனவில் இருக்க முடியுமென அவன் அன்று தான் கண்டுகொண்டான். பத்தொன்பது வயது இரட்டைக் கால் பூ என அவள் நடக்கிற போது அவளைச்சுற்றி ஒரு மாய நெருப்பு ஒளிர்வதை போல இருந்தது. அவளது இறுகிக் கட்டிய போனி டெயில் தலைமுடி ஏதோவொரு ரகசியத்தை கட்டி வைத்தது போல இருந்தது. அவளது கண்கள் இன்னொரு உலகிற்கு கூட்டிச் செல்கிற வாசல் என இருந்தது. அந்தக் கண்களின் ஓரத்தில் அவள் வரைந்திருந்த கூறிய கண் மை அவனது இதயத்தை கீறி கிழிப்பது போல இருந்தது.
மோகனுக்கு காரணமின்றி வியர்த்தது. அவனது நெஞ்சு ஏனென்று தெரியாமல் அப்படி துடித்தது. அவன் விரல்களில் மின்னல் துளிகள் கசிவது போல இருந்தது. இப்போதே அந்தக் கண்களில் முத்தமிட வேண்டுமென அவனுக்கு தோன்றியது. அவளது வசீகரத்தால் மந்திரிக்கப் பட்டவன் போல இருந்தான். ஒரே நேரத்தில் இனம் புரியாத வலியாகவும் இது வரை இல்லாத அளவிற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அந்த வகுப்பில் அவன் பாடத்தை விட அவளையே கவனித்துக் கொண்டிருந்தான். அவளுடன் எப்படியாவது பேசி விட வேண்டுமென காத்துக் கொண்டிருந்தான். அவளுக்கு ஹாக்கி பிடிக்குமென கண்டு கொண்டான். மேலும், மாயா பெண்கள் ஹாக்கி அணியில் இருக்கிறாள் என்பதையும் தெரிந்து கொண்டான். அவளைப் பார்க்க அவளுடன் பேசுவதற்கான வாய்ப்பை உருவாக்க அவனும் ஆண்கள் ஹாக்கி அணியில் சேர்ந்து கொண்டான்.
மாவட்ட அளவிலான போட்டிகள் தொடங்க இருந்தன. அனைத்து அணிகளும் முழு வீச்சில் பயிற்சியில் இருந்தனர். மோகன் தன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் இருந்தான். வெறுமனே மைதானத்தில் மட்டையை தூக்கிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தான் என்பதே சரி. அவன் மனது முழுக்க மாயாவே நிரம்பி இருந்தாள். அவளைப் பார்ப்பதும், அவளைப் பற்றி யோசிப்பதும் என ஓடிக் கொண்டிருந்தான்.
அப்போது, யாரோ ஒரு மாணவனின் ஹாக்கி ஸ்டிக்கில் மோதி கீழே விழுந்தது விட்டான். விழும் போது அவன் போட்ட சப்தத்தில் மாயா உட்பட அருகில் இருந்த அனைவரும் அங்கு கூடி விட்டனர்.
மாயா அவனுக்கு நேர் எதிரே நின்று கொண்டிருந்தாள். மோகன் தன் மனதில் ஒத்திகை பார்த்து வைத்திருந்த அந்த வரிகளை சொன்னான்.
"நான் செத்துடேனா?" என்று மோகன் கேட்டான்.
"இல்லையே" என்று மாயா சொன்னாள்.
"அப்புறம் எப்படி என் கண்ணுக்கு தேவதை தெரியுது?"
சுற்றி நின்ற மாணவர்கள் சென்ற பிறகு, மாயாவையே பார்த்துக் கொண்டிருந்த மோகனைத் திருப்பி டெஸ்லா கேட்டான்,
"எப்படி எப்படி, அவங்க தேவதையோ?"
"ஆமாண்டா, அவ தேவதை தான்"
"அந்தப் பொண்ணு ஓகேவா இருக்கு, சும்மா நீ சொல்ற அளவுக்கெல்லாம் அந்தப் பொண்ணு ஒன்னும் தேவதை மாதிரி இல்லை."
"அடேய், டெஸ்லா அந்தப் பொண்ணு தேவதையா இல்லையாங்கிறத என்னோட கண்ணுல இருந்து பாத்தா தான் தெரியும். உன்னை மாதிரி கம்ப்யூட்டர் மண்டையனுக்கெல்லாம் தெரியாது." என்று சொல்லிவிட்டு, டெஸ்லாவின் கையை பிடித்துக் கொண்டு எழுந்து நின்றான். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
மோகன் தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை திரும்பாமலேயே மாயா உணர்ந்து கொண்டாள்.
அவளை அவன் எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பான் என்று அவளுக்கு தெரியும். ஒரு சில நேரம் தன்னிடம் பேச முயன்று அது முடியாமல் திரும்பி சென்றிருக்கிறான். இறுதி வரை இதயம் முரளி போல பேசாமலே சென்று விடுவான் என்று அவள் நினைத்திருந்தாள். அவன் இப்படி திடீரென வந்து பேசுவான் என்று அவள் நினைத்துப் பார்க்கவே இல்லை. அதுவும் எடுத்த எடுப்பிலேயே தேவதை என்று சொல்வான் என அவள் நினைக்கவே இல்லை.
இதையெல்லாம் விட பெரிய ஆச்சரியம் என்னவென்றால், அவன் அப்படி சொன்னதற்கு தான் ஏன் வெட்கப்பட்டு முகம் சிவந்தேன் என தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.
மாயா வீட்டிற்கு வந்த பிறகும் தன்னை மோகன் பார்த்துக் கொண்டிருப்பது போலவே இருந்தது. புத்தகங்களை எடுத்து வைத்து படிக்கத் தொடங்கினாள். பின் அதனை மூடி வைத்துவிட்டு கைப்பேசியில் வெறுமனே ஏதோ பார்த்துக் கொண்டிருந்தாள். பின் பாடல்களை கேட்க தொடங்கினாள். ஆனால், ஒரு பாடலைக் கூட அவளால் முழுமையாக கேட்க முடியவில்லை. மனம் எதிலும் ஒன்றவில்லை, அங்கு மோகன் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்தான்.
மாயாவுக்கு அழுகையாக வந்தது. அழுதாள். தலைமுடியை அவிழ்த்து விட்டுக் கொண்டாள். மனதில் இருந்த பாரம் கொஞ்சம் குறைவது போல இருந்தது. பின்னர், எழுந்து சென்று பாத்ரூம் கண்ணாடி முன் நின்று முகத்தை கழுவினால், அப்போது, கண்ணாடியில் அவளது முகம் தெரிந்தது. முகம் பளிங்கு போல வெளிறி இருந்தது. கண்கள் இரத்தச் சிவப்பாக ஒளிர்ந்தது. அவளது தலை முடிக் கற்றைகள் சிறு சிறு பாம்புகள் என நெளிந்து கொண்டிருந்தன.