4. Welcome
மோகன் முகத்தில் ஒரு பெரும் சிரிப்புடன் நடந்து வந்தான். அன்று நடந்ததை திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்துக் கொண்டான். ஒரு வழியாக அவன் மாயாவிடம் பேசி விட்டான். அவனால் அவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
வீட்டின் கதவைத் தட்டினான். வீட்டிற்கு முன்பு கலைவாணி மனநல மருத்துவர் என்று பொன்னிற பலகையில் கருப்பு எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்தது. அவனது அத்தை கதவைத் திறந்தாள். மஞ்சள் நிற டாப்சும் வெளிறிய நீல நிற ஜீன்ஸ்சும் அணிந்திருந்தாள். அவளுக்கு முப்பத்தெட்டு வயது என்று சொன்னால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். உறவில் அத்தை என்றாலும் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் அக்கா போலவும் பாசத்தைக் காட்டுவதில் அம்மா போலவும் இருந்தாள்.
"ஏண்டா இப்படி பல்லைக் காட்டிட்டு வர?" என்று கேட்டாள்.
"ஒன்னுமில்லையே" என்று சொல்லிவிட்டு அவளைத்தாண்டி வீட்டிற்குள் சென்றான்.
"ஏய், என்னமோ இருக்கு சொல்லுடா" என்று பின்னால் வந்தபடியே கேட்டாள்.
"அட ஒண்ணுமில்லை த்தை" என்று சொல்லிவிட்டு வேக வேகமாக தனது அறைக்கு ஓடினான்.
"டேய். சரி போ, எப்படி இருந்தாலும் நைட் சாப்பாட்டுக்கு கீழ தான வரணும். அப்போ பாத்துகிறேன். " என்று புன்னகைத்தபடியே சொன்னாள் அத்தை.
மோகன் வெட்கப்பட்டுகொண்டே தனது அறைக்கு ஓடி, சட்டையை கழட்டி விட்டு, கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தான். முகத்தில் மெல்லிய மீசை முளைத்திருந்தது. சருமத்தில் அங்கங்கே சிறு சிறு புதிய பருக்கள். எப்போதும் பார்க்கிற அதே முகம் தான் ஆனால், ஏனோ அன்று அவனது உடலையும் அவனது முகத்தையும் பார்ப்பதற்கு அவ்வளவு சந்தோஷமாய் இருந்தது.
அவன் எண்ணம் முழுக்க அவளாக இருந்தாள். கண்களை மூடிக்கொண்டு கொஞ்ச நேரம் கைப்பேசியில் யுவன் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தான். எத்தனைப் பாடல்களைக் கேட்டான் எவ்வளவு நேரம் போனது என எதுவும் தெரியவல்லை.
"உனக்கெனவே காத்திருந்தாலே...
காலடியில் வேர்களும் முளைக்கும்...
காதலில் வலியும் இன்பம் தானே... மானே..." என்று ஒலித்துக் கொண்டிருக்கையில் "ச்சே! இந்தப் பாட்டை ஏன் உதித் நாராயணன் பாடல?" என்று நினைத்துக் கொண்டான். அப்போது அவனது அறைக்கதவு தட்டப்பட்டது.
"டேய், மோகா சாப்பிட வா?" என்றாள் அவனது அத்தை கலைவாணி,
மோகனும் அத்தையும் டைனிங் மேஜையில் அமர்ந்து சாப்பிட தொடங்கினர். அந்த மேஜை மட்டுமல்ல அந்த வீடே இருவருக்கு கொஞ்சம் பெரியதாக தான் இருந்தது. சிறு வயதிலிருந்தே ராணுவத்தில் இறந்த தனது அண்ணன் மகனை தன் பிள்ளை போல வளர்த்து வருகிற கலைவாணி அவனை வளர்க்கும் பொருட்டு தான் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்தாள்.
உண்மையில் அவளுக்கு கல்யாணம் செய்து கொள்ள ஆசை இருந்தது, ஆனால் அவளுடைய நிபந்தனைக்கு ஏற்றவாறு எந்த மாப்பிள்ளையும் கிடைக்க வில்லை.
நிபந்தனை 1:
திருமணத்திற்கு பிறகும் அவள் அவளது அண்ணன் மகனான மோகனை உடன் வைத்திருந்து வளர்ப்பாள்.
முதல் நிபந்தனைக்கு சரி என்று சொல்லி வருகிற மாப்பிள்ளைகளும் அவளது இரண்டாவது நிபந்தனையை கேட்டு ஓடி விடுகின்றனர்.
நிபந்தனை 2:
திருமணத்திற்கு பிறகு மோகன் மட்டுமே குழந்தை எதற்காகவும் அவள் இன்னொரு குழந்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாள்.
பல ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை ஒரு ஆண்மைக்கான கிரேஜுவேஷன் என்றும் அதுதான் தனக்கான ப்ரூஃப் என்றும் நினைப்பதனால் யாரும் கலைவாணியை திருமணம் செய்து கொள்ள முன் வரவில்லை. ஆனாலும் மோகன் தனது அத்தைக்கு எப்படியாவது கல்யாணம் செய்து வைத்து விட வேண்டுமென விடாப்பிடியாய் இருக்கிறான். ஆனால், கலைவாணி இதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் மோகனை நல்ல முறையில் வளர்த்து வருகிறாள்.
அன்று வேஜிடெபில் பிரியாணி செய்து முட்டைப் பொறியல் செய்திருந்தாள். மோகன் அதனை வேக வேகமாக போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அத்தை புன்னகைத்த படியே, " டேய், என்ன ஆச்சு?" என்று கேட்டாள்.
"ஒன்னுமில்லையே"
"அப்புறம் ஏண்டா சோறே பாக்காதவன் மாதிரி இப்படி அள்ளி வீசிட்டு இருக்க?"
"அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை கொஞ்சம் பசிக்குது அதான்"
"டேய், நான் படிச்சு தான் சைக்யாட்ரிஸ்ட் ஆன. எங்கிட்ட பொய் சொல்லாம சொல்லு. நீ எதுக்காகவோ ரொம்ப சந்தோசமா இருக்க, அது, உன் மூஞ்சில எழுதி ஒட்டிருக்கு. ஆனா, மறைக்கனும்னு நினைக்கிற ஒழுங்கா என்ன நடந்ததுன்னு சொல்லு"
"அத்தை நான் இன்னைக்கு மாயா கிட்ட பேசிட்டேன்."
"பரவாயில்லடா ஃபைனல் இயர் வரைக்கும் வச்சி ஜவ்வா இழுப்பேன்னு நினைச்சேன். நல்ல வேளையா ஃபர்ஸ்ட் இயர் முடியறதுக்குள்ள பேசிட்ட.
நீ என்ன சொன்ன பதிலுக்கு அவ என்ன சொன்னா?"
"ஒன்னும் பெரிசா சொல்லல அத்தை, சும்மா ஒரு ஹாய் சொன்னேன், பதிலுக்கு அவளும் ஹாய் சொன்ன அவ்ளோதான்"
"புரியுது. நீ, சந்தோசமா இருக்கிறத பாக்குறதுக்கு எனக்கு சந்தோசமா இருக்கு.
ஆனா, ஒன்னை மட்டும் நியாபகத்துல வைச்சுக்கோ, இந்த வயசுல இது மாதிரி அட்ரேக்ஷன் வரது எல்லாம் ஓகே தான், ஆனா இதை ரொம்ப சீரியஸா எடுத்துட்டு வாழ்க்கையை விட்டுறாத. அது இந்த அட்ரேக்ஷன், லவ் இது எல்லாத்தை விடவும் பெரிசு. "
"அத்தை, கண்டிப்பா நான் நீங்க கஷ்டப்படுற மாதிரி எந்த விஷயமும் செய்ய மாட்டேன்."
"எனக்கு தெரியும், நீ தப்பா எதுவும்பண்ண மாட்டேன்னு இருந்தாலும். பாரு அது இவ அண்ணன் பையன்னு சொல்லித்தான் உருப்படாம போக விட்டுட்டா, இதே அவ பையன்னா இருந்திருந்தா இப்படி போக விட்டுருப்பாளான்னு யாரும் என்னைய கேட்கும் படி வைச்சிராத. அதான் சொன்னேன்.” என்றாள்.
அத்தை எப்போதும் இப்படித்தான் தன்னைப் பற்றிய எந்த விஷயத்திலும் அதீத பயத்துடனும் கவனத்துடனும் இருப்பாள் என்பதனால், மோகன் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இருவரும் பேசிக்கொண்டே இரவு உணவை சாப்பிட்டு முடித்தனர். மோகன் அத்தையிடம் சொல்லி விட்டு தனது அறைக்கு வந்தான். அன்று நடந்த ஹாக்கிப் பயிற்சி கொடுத்த உடல் சோர்வும், வயிறு முட்ட தின்ன இரவு உணவும் அவனுக்கு தூக்கத்தை வரவழைத்தது. கட்டிலில் படுத்த பத்தாவது நிமிடம் நிஜத்திலிருந்து நழுவி கனவில் விழுந்தான்
கனவில் ஒரு பூந்தோட்டம் சிவப்பு, வெள்ளை, மஞ்சள், நீலமென வண்ண வண்ண ரோஜாக்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ரோஜாக்கள் மட்டுமே தெரிந்தது அதன் பின் அவை மேலே வளைந்து தலைக்கு மேலேயும் ரோஜாக்களாக இருந்தது. கீழேயிருந்து ஒரு ரோஜாவை மேலே தூக்கி வீசினான். அந்த ரோஜா தலைக்கு மேலே இருந்த தலைகீழ் ரோஜா தோட்டத்தில் போய் ஒட்டிக் கொண்டது. புவியீர்ப்பு விசை அங்கே வித்தியாசமாக இருந்தது. ரோஜாக்களால் மட்டுமேயான ஒரு ரோஜா உலகம். அதன் நடுவினில் மாயா நின்று கொண்டிருந்தாள். அவன் மாயாவை நோக்கிச் சென்றான்.
மாயா, அவனிடம் பேசத் தொடங்கினாள், "ஏன், கிரவுண்ட்ல அப்படி சொன்ன?"
"எப்படி சொன்னேன்."
"என்னைப் பாக்க தேவதை மாதிரியா இருக்கு?"
"ஏன் அது உனக்கே தெரியாதா? இல்லை அதை நான் சொல்லணும்னு நினைக்கிறியா?. உண்மைய சொல்லு சொர்கத்துல நீ ஏதோ சேட்டை செஞ்சதுனால தான உன்னை பூமிக்கு அனுப்பிட்டாங்க?".
"நீ அழகா பேசுற மோகன்."
"உன் அழகுக்கு மேல அழகா பேச முடியல மாயா".
மாயா சிரித்தாள். பின்னர், இருவரும் ஏதேதோ அர்த்தமில்லாத வார்த்தைகளை பேசியபடி அந்த ரோஜாத் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கே சூரியன் மறையத் தொடங்கியது. மஞ்சள் வெயில் அந்த தோட்டம் முழுக்க பரவத் தொடங்கியது. மோகனும் மாயாவும் ஓரிடத்தில் நின்றனா். மோகன் அவளை முத்தமிட நினைத்தான். அவளைக் கண்ணோடு கண் நோக்கினான். அவள் கண்ணில் ஒரு மாய நீல நிறம் இருந்தது. அது அவனை எங்கோ இழுப்பது போல இருந்தது. அவளது உதட்டில் புன்னகை சூடியிருந்தாள். அவன் அவளது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அது மெல்ல ஒளிர்வது போல தெரிந்தது. அவனது விரல்களில் ஏதோ கூசுவது போல இருந்தது. கீழே குனிந்து தனது விரல்களைப் பார்த்தான். அதிலிருந்து மின்னல் கசிவது போல எலக்ட்ரிக் ஆர்க் வந்து கொண்டிருந்தது.
"மோகன், என்ன இது ?" என்று மாயா கத்தினாள்.
"எனக்கும் என்னன்னு தெரியல" என்று சொல்லிவிட்டு மோகன் குழப்பத்துடன் நின்றான்.
"மோகன் என்ன இது?" என்று திரும்ப திரும்ப கேட்டபடி மாயா அழுது கொண்டே கேட்டுக் கொண்டு இருந்தாள்.
திடீரென அனைத்தும் வெள்ளையாகிப் போனது. அவன் கண்களை மூடிக்கொண்டான். அவன் திரும்பிக் கண்ணை திறந்த போது அங்கே மாயா இல்லை. அவன் தனது அறையில் தனியாக நின்று கொண்டிருந்தான்.
இப்போதும் அவன் விரல்கள் கூசிக் கொண்டு இருந்தன. அவன் தனது கையைப் பார்த்தான். அதில் இப்போதும் மின்னல் கசிந்து கொண்டிருந்தது.
மோகனுக்கு என்ன நடக்கிறது, என்று புரியாமல் குழப்பத்தில் இருந்தான்.
அப்போது திடீரென கீழே அவனது அத்தை அவனைக் கூப்பிடுவது போல தெரிந்தது.
அவன் விரைவாக படிகளில் ஓடி கீழே வந்தான். அறையின் விளக்குகள் அணைந்து அணைந்து எரிந்துக் கொண்டிருந்தன.
"மோகன், இங்க என்ன நடக்குது?" என்று கேட்டாள்.
மோகன் யதார்த்தமாக முகத்தை வைத்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டே, "எனக்கு தெரியல அத்தை நான் எதுவும் செய்யல" என்றான்.
"உன் மூஞ்சிய பாத்தாலே தெரியுது. நீ தான் ஏதோ செஞ்சிருப்பேன்னு"
"எனக்கு சத்தியமா தெரியல அத்தை இங்க என்ன நடக்குதுன்னு" என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது வரவேற்பறையில் ஏதோ சத்தம் கேட்டது.
மோகன் தனது அத்தையைத் தாண்டி வரவேற்பறைக்கு சென்றான். அங்கே தொலைக்காட்சி அணைந்து ஒளிர்ந்து அணைந்து கொண்டிருந்தது. அதில் பெரிய எழுத்துக்களில் "Welcome" என்று எழுதி இருந்தது. விடிவதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருந்தது. அப்போது வானில் ஒரு இடிச் சத்தம் கேட்டது. மோகன் அந்த இடியோசை வந்த திசையைப் பார்த்தான். அந்த இடியோசை வந்த திசையை நோக்கி செல்ல வேண்டுமென அவன் இதயம் கூறியது. அவன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.
"மோகன், நீ எங்கேயும் போகக் கூடாது" என அத்தை பின்னால் நின்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
தனக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அங்கு சென்றால் பதில் கிடைக்குமென அவன் நம்பினான். அவனுக்கு உண்மையில் தான் என்ன செய்கிறோம் என்று புரியவில்லை. வீட்டின் வாசலைத் தாண்டி மின்னல் வந்த திசையை நோக்கி ஓடத் தொடங்கினான்.
கலைவாணி என்ன செய்வதென்று தெரியாமல் வாசலைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.